திருத்தணி ஏப்.19: தமிழகம் முழுவதும் நேற்று நாடாளுமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. வாக்காளர்களுக்கும் தேர்தல் ஆணையம், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் பூத் சிலிப்பை வாக்காளர்களுக்கு ஒவ்வொரு தேர்தலின்போது வழங்கி வருகிறது. கடந்த தேர்தல்களில் பலரும் அந்த பூத் சிலிப்பை வைத்து வாக்குப் பதிவு செய்து வந்தனர். இந்த நிலையில், நேற்று நடந்த நாடாளுமன்ற தேர்தலில், 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை வாக்குச்சாவடிக்கு எடுத்து சென்று காண்பித்தால் மட்டுமே வாக்குப் பதிவு ஏற்றுக்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது.இந்த நிலையில், திருத்தணி மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த மக்கள் பலர் நேற்று, தேர்தல் ஆணையம் வழங்கிய, பூத் சிலிப்பை மட்டுமே எடுத்துக் கொண்டு வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்றனர். அவர்கள், நீண்ட நேரம் வரிசையில் கால்கடுக்க காத்திருந்தனர். பின்னர், வாக்குசாவடி அதிகாரிகளிடம் பூத் சிலிப்பை காட்டி உள்ளனர்.
அப்போது, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், பூத் சிலிப்புடன் ஆணையம் அறிவித்துள்ள 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை கொண்டு வந்தால்தான் வாக்கு அளிக்க முடியும் என கூறி, ஏதாவது ஒரு ஆவணத்தை கொண்டு வரும்படி கூறியுள்ளனர். அதனால், வாக்காளர்கள் ஆத்திரம் அடைந்து, அலுவலர்களுடன் காரசாரமான வாக்குவாதங்களில் ஈடுபட்டனர். குறிப்பாக திருத்தணியில் டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசினர் மேல்நிலை பள்ளி வளாகத்தில் வாக்கு வாதம் நடந்தது